அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்து சலுகை வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுவதாகவும், முறையான கணக்கெடுப்புடன் இதனை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்ததாகவும், Verite Research நிறுவகம் கூட சுட்டிக் காட்டியது போல் மின் நுகர்வு அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டால் இது அறிவியல் பூர்வமாக சரியான தெரிவாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
LIRNE asia நிறுவகம் 13 மாவட்டங்களில் 10,000 குடும்பங்களை மையமாக வைத்து நடத்திய கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் வறியோர் மக்கள் தொகை 14 சதவீதத்தில் இருந்து 31 சத வீதமாக 17 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், 30 இலட்சத்தில் இருந்து வறியோர் எண்ணிக்கை 70 இலட்சமாக உயர்ந்துள்ளதுள்ளதாகவும், அரசாங்கத்தின் இந்த தெரிவு முறையால், 70 இலட்சம் வறியோர் தொகையில் ஒரு பகுதியினருக்கு இந்த நலன்புரி நிவாரணங்கள் கிடைக்காது போகும் நிலை மேலேலுவதாகவும், அஸ்வெசும வேலைத்திட்டம் என்பது கண்ணை மூடி நலன்புரி நன்மைகளை நீக்கும் வேலைத்திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) தெரிவித்தார்.
இத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்த மின் நுகர்வின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தால் 80 சதவீதத்திற்கும் மேல் இது வெற்றி பெற்றிருக்கும் என்றும், தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் பூர்வமான முடிவாக இருந்தாலும், எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல், பயனடைய வேண்டியவர்களுக்கு பலன் அளிக்காமலும், பயனடையக் கூடாதவர்களுக்கு இதனூடாக பலன்களை வழங்கியும் இந்த அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டம் சிறப்பாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் விதத்தில் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாகவும், இது சீர்செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கான அடிமட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
வறியோரின் ஒரு சிலருக்கே இதன் பயன்கள் கிடைக்கப்பெறுவதாகவும்,
வறியோர்களின் அதிகளவானவர்களுக்கு இது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் சரியான கணக்கெடுப்பை நடத்தவில்லை என்னும், வறியோரின் கணக்கை அரசாங்கம் சரியாக கருத்தில் எடுக்கவில்லலை என்றும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான கொள்கையினாலையே இது ஏற்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்ப அலகொன்றின் வருமானத்தையும் செலவீனங்களையும் மீளாய்வு செய்வது இன்றியமையாதது எனவும், வறிய மக்கள் யார் என்பதனை சரியாக கருத்திற் கொள்ளப்பட்டு சரியாக கணக்கெடுத்து வறுமைக்கோட்டு தரவு மேற்கொள்ளப்பட்டே ஆக வேண்டும் என்றும், மாகாண, மாவட்ட, பிரதேச மட்டத்தில் குடும்ப அலகு ஒன்றிற்கான வருமானத்தையும் செலவீனங்களையும் மீளாய்வு செய்து வறிய மக்கள் யார் என்பதனை சரியாக கணக்கெடுக்குமாறும், அஸ்வெசும திட்டத்தில் பலர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக புலப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகள் வகைபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், மாதந்தக் கொடுப்பணவு வேறாக்கப்பட்டுள்ளதாகவும், இது அடைவுகளை சுட்டிக்காட்டாது காலம் வரையறுக்கப்பட்ட ஓர் திட்டமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வராந்த செயற்குழுக் கூட்டத்தில் இன்று (26) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.