கடன் மறுசீரமைப்பினால் EPF/ ETF பாதுகாக்கப்பட்டது

333

இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச் சங்கத்தின் உறுப்பினர், இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேகா தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படாவிட்டால் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி உள்ளிட்ட நிதியங்களில் உள்ள பணம் ஊழியர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருந்தது என்றும், ஆனால் கடன் மறுசீரமைப்பின் மூலம் இந்தப் பணம் பாதுகாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே, இலங்கை வங்கி சங்கத்தின் உறுப்பினரான இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ரசல் பொன்சேக்கா,

இலங்கையால் தாங்க முடியாத அளவுக்கு கடன் வாங்க வேண்டியிருந்தது. 2022 ஏப்ரல் மாதமாகும் போது நாடு அதன் விளைவை உணரத் தொடங்கியது. இதனால் கடனை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இருப்பதாக மத்திய வங்கி ஆளுநரால் அறிவிக்க நேரிட்டது. தேவையான டொலரை எங்களால் ஈட்ட முடியவில்லை. வெளிநாடுகள் எங்களுக்கு கடன் தரவில்லை. இறுதியாக, கடன் நெருக்கடி நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்தது.

நாட்டிலுள்ள வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிலர் தொழில்களை இழந்தனர். நாளடைவில் இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியது. அதன் பின்னரே, மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இறுதியாக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சில நிவாரணங்களைப் பெற வேண்டியிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களாக மொத்தமாக 84 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான போதுமான பொருளாதாரம் இலங்கைக்கு கிடையாது. அந்த கடனுக்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நேரத்தில்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த 84 பில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்த நாங்கள் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதில், வெளிநாட்டுக் கடன்களை வழங்கிய நாடுகளுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டும். உடன்பாடு ஏற்பட்டவுடன், கடனை தள்ளுபடி செய்யலாம்.

இலங்கையிலுள்ள வங்கி வைப்பாளர்களைப் பாதிக்காத வகையில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம், நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் வைப்பாளர்களுக்கு இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படாது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதற்கு பெருமளவான பிணைமுறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாற்று தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று வட்டி விகிதத்தைக் குறைப்பது. மற்றொன்று கடனை மீளச் செலுத்துவதை ஒத்திவைப்பது. இதன் காரணமாக, ஊழியர்களின் EPF/ETF மற்றும் ஏனைய நிதியங்களில் உள்ள பணம் பாதுகாக்கப்படுகிறது.

பணவீக்கத்தால் ஊழியர் நிதியங்களுக்கு அரசு வழங்கும் வட்டி வருமானம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வட்டி வருமானத்தின் இந்த பிரச்சினை பங்களிப்பு நிதிகளை மட்டுமே பாதிக்கிறது.

எனவே, ஊழியருக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. அனைத்துப் பணத்தையும் இழப்பதற்குப் பதிலாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் இந்த மட்டத்திலாவது பணத்துடன் குறிப்பிடத்தக்க வட்டியைப் பெறுவது மகிழ்ச்சியான விடயமாகும்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்ட பிறகு நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி பணவீக்கம் குறையும். இத்திட்டத்தின் மூலம் நாடு பல பொருளாதார நன்மைகளைப் பெறும். நாட்டுக்குத் தேவையான பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் எளிதாகப் பெறலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது. அந்த நிலையை அடைய நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here