எந்தவொரு அழுத்தங்கள் அல்லது அரசியல் தேவையின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஒருபோதும் எடுக்காது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனித குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்காலத்தில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(06) நடைபெற்ற ஊடக மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,
மேலும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 33,000 உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர். அதில் யானை வேலிகளைப் பாதுகாக்க ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், காட்டு யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக யானை வேலிகளை அமைக்க 10 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாங்கள் புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எதிர்காலத்தைப் பற்றி நாம் வித்தியாசமாக சிந்திக்கிறோம். அரசியல் சித்தாந்தங்கள் அதிகார தளங்களின் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும், அவை தேவைப்படும்போது நாட்டிற்காக முன்நிற்கின்றன. அதற்காகவே செயற்படுகின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்து தற்போதைய நிலைமையை புதிய பாதைக்கு மாற்ற வேண்டும். கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்று நாங்கள் நினைக்கின்றோம். கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவே இவற்றையெல்லாம் செய்து வருகிறோம்.
பல்வேறு குழுக்கள் அன்றும் இன்றும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.பி.க்களின் கடிதங்களுக்கு வேலை வழங்கிய காலமும், ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து வேலை வழங்கிய காலமும் மாற்றப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக மிகவும் கடினமான மற்றும் பிரபல்யமற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.“ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.