சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து RAMIS கட்டமைப்பைப் பொறுப்பேற்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முதன்மைத் திட்டம் தொடர்பில் வழி வகைகள் பற்றிய குழு அவதானம்
நாட்டில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள RAMIS மென்பொருள் கட்டமைப்பை சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
RAMIS அமைப்புத் தொடர்பில் செயற்படும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் குறித்த அமைப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குத் தேவையான மனித வளம் உள்ளிட்ட உள்ளக விடயங்கள் திணைக்களத்திற்குள் உருவாக்கப்படாமை இங்கு தெரியவந்ததுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றைக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
மேலும், RAMIS அமைப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கட்டமைக்கப்பட்ட முன்மொழிவை இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.