இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அண்மையில் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இங்கு, நட்புறவுச்சங்கத்தின் உப தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் அசோக் அபேசிங்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். எம்.ஏ. சுமந்திரன் செயலாளராகவும், ஹர்ஷண ராஜகருணா உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டதுடன், பொருளாளராக சாகர காரியவசம் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் இடையில் 7 தசாப்த கால இரு தரப்பு உறவுகள் நிலவி வருவதாகவும், இக்காலகட்டத்தில் ஐக்கிய இராஜ்ஜியம் இலங்கைக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு நிறுவனங்கள் ஊடாக ஐக்கிய இராஜ்ஜியம் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் லீசா வொன்ஸ்டோல் தெரிவித்தார்.
அத்துடன் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க ஏனைய கடன் வழங்குநர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.