கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டில் 55 பில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நெருக்கடியான பொருளாதாரத்தின் மத்தியிலும் ஒரு நாடு என்ற வகையில் கல்வியை மேம்படுத்துவதற்கு இவ்வாறான கவனம் செலுத்துவது தொடர்பில் அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற கல்விச் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு கல்விக்கான தொகை 466.276 பில்லியன் ரூபாவாகும் எனவும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 517.05 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55 பில்லியன் ரூபா அதிகரிப்பு எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.