அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பிடகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று (06) இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்த தசாப்தத்தில்.எனவே, தற்போது நிலையான பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு செல்ல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதில் நவீன பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் வங்குரோத்து நிலையை அடைந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை விரைவாக மீண்டு வர முடிந்துள்ளதாக உலக நிதி நிறுவனங்கள் கூட ஒப்புக்கொள்கின்றன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அத்துடன் அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்த்தை எட்ட முடியாது. நாட்டுக்கு நிதி ஒழுக்கம் தேவை. பொருளாதாரத்தை நிதி ஒழுக்கத்துடன் நிர்வகித்தால், எதிர்காலத்தில் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும்.
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அரசின் செலவினங்களை குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை தயாரித்துள்ளோம்.
சுற்றுலாத் துறையின் மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். அடுத்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக உயர்த்தினால் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற முடியும் என நம்புகின்றோம்.
மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.