மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்து வருடங்களின் பின்னர் மஹபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியை மீள ஆரம்பிப்பதன் மூலம் அதிகமானவர்களுக்கு உயர்கல்விக்கான கதவுகள் திறக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை ஆரம்பித்து வைத்து இலங்கையின் கல்விக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீதாவக பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி மையமான Post Graduate for Research நிறுவனத்திற்கு அவரது பெயரிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மஹபொல 2023 கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று (14) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் மிகப்பெரிய கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியான ‘மஹபொல 2023’ கண்காட்சி கடந்த 13 ஆம் திகதி ஜா-எல நகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.