யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகளில் ஏற்பட்ட பக்டீரியா தாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, விவசாய அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று சென்று யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் தொடர்பில் ஆராய்ந்தது.
விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இதன்போது, உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்ற 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
அதேநேரம் உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமையினால் அதில் 40 சதவீத உருளைக்கிழங்குகளில் முற்றிலுமாக பக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கு, பக்டீரியா தாக்கம் ஏற்பட்ட விதை உருளைக்கிழங்குகளை உடனடியாக அழிப்பதற்கு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விதை உருளைக்கிழங்குகள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.