மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தேவையான முன்மொழிவுகள் வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாளக பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த முன்மொழிவுகளை இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மின்சார அலகொன்றின் கட்டணம் அதிகரித்திருப்பதால் பொதுவான மின்சாரப் பாவனையாளர்கள், மற்றும் கைத்தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, 2023 ஒக்டோபர் மாதம் 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 100% வீதத்தால் நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதிக மழையினால் இலங்கை மின்சார சபை அதிக இலாபம் ஈட்டி வருவதாகவும், அந்த இலாபத்தின் பலனை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், கூரையில் பொருத்தப்படும் சூரியப்படலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ள சூரியப்படலங்களின் இறக்குமதியின் போது வரி விலக்கு அளிக்குமாறும் முன்மொழியப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே மின் கட்டணத்தை திருத்தம் செய்யவும், மின் கட்டணத்தைச் செலுத்தும்போது பொதிமுறையை (பக்கேஜ்) அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், புதிய மின்சாரச் சட்டம் குறித்து குழுவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.