இந்தோனோசியாவில் நடைபெறவுள்ள நீர் சம்பந்தமான சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் அமைச்சரை அமைச்சில் வைத்து இன்று (10) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் அரசியல், பொருளாதார காரணிகள் தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றது.
அனைவருக்கும் சுகாதார பாதுகாப்புடன் குடிநீரை தடையின்றி வழங்குவதற்காகவும், நீர் கட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் தூதுவரிடம் அமைச்சர் எடுத்துரைத்தார்.
மலையக பெருந்தோட்ட பகுதிகளின் நிலைவரம், அதனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், அதற்கு இந்தோனேசியா எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.