எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 29 ஆம் திகதி பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் (எஸ்ஐசிசி) கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் வழக்கின் சாட்சியங்கள் விசாரிக்கப்படவுள்ளதுடன், துறைமுக அதிகாரி முதல் சாட்சியாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.