பொது போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக இலங்கை பொலிஸார் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் காரணமாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் காலை 08.00 – 10.00 மற்றும் மாலை 05.00 – 07.00 மணி வரை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களில் பொதுப் போக்குவரத்தில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த காலக்கட்டத்தில் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் சிவில் உடையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் உடையில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக சீருடையில் பொலிஸ் அதிகாரிகளும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.