9 வருடங்களின் பின்னர் மின்கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் மக்கள் அதனை உணர்ந்துள்ளதாகவும், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாததன் காரணமாக செலுத்த வேண்டிய கடன் தொகை 440 பில்லியன் எனவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது இலங்கையில் மின்சார விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகள் படிக்க மின்சாரம் தேவையில்லை, மின்சாரம் இல்லையென்றால் குப்பி விளக்கை வைத்து படிக்கலாம், இன்று இருக்கும் வைத்தியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்களுக்கும் அப்போது மின்சாரம் இல்லை எனவும் அவர்கள் இருந்ததை வைத்து கற்றுக்கொண்டனர். தன்னிடம் உள்ளவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், எப்படி அங்கு செல்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு மின்கட்டணத்தை கட்ட முடியாது என்று நீங்கள் நினைக்கவில்லையா? என ஊடகவியலாளர் எழும்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சார சபையின் பேச்சாளர், இது தந்தையின் தவறு எனவும், பணத்தை தேடுவதற்கு தந்தைக்கு கடினமாக உழைக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.