எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
இதேவேளை நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக இந்திய தூதருடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது,
போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும்.
2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகோட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சுட்டுவிட்டது போலுள்ளது.
என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.