பிரதான தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஒருபோதும் உடன்பாடுகள் இல்லை எனவும் அதற்கு இணங்கப் போவது இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நியூஸ்ஃபெஸ்ட் தனியார் ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார்.
“பொதுவாக தேர்தலை பிற்போடுவதனை நாம் எதிர்க்கின்றோம். தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்..”
“.. தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளது, அரசாங்கத்துடன் இணைந்துள்ள சில மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களே மொட்டுக் கட்சியின் அலுவலகத்திற்கு வருகின்றனர். மாத்தறை மாவட்டத் தலைவர், காலி மாவட்டத் தலைவர், கம்பஹா மாவட்டத் தலைவர், இரத்தினபுரி மாவட்டத் தலைவி மற்றும் கெஹெலியவும் இருக்கின்றார். இப்போது கெஹெலியவுக்கு அமைச்சுப் பதவி இல்லை. அவரைத் தவிர மற்றுமொரு அமைச்சரும் இருக்கிறார். அவர் மாவட்டத் தலைவர் அல்ல கூட்டமைப்பினை சேர்ந்தவர். பசுமாட்டின் முன்பகுதி மாத்திரமே எம்மிடம் உள்ளது பின்பகுதி வேறு எங்கோ உள்ளது..” எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
“.. கட்சி என்ற முறையில் நான் ஸ்தாபகர் என்ற முறையில் கட்சியின் நலனை முதலில் பார்க்க வேண்டும். கட்சியினை பலப்படுத்த வேண்டும். இன்று நாடுமுழுவதும் உள்ள அமைப்புக்களை கொண்ட பிரதான கட்சிகள் இரண்டு உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றது தேசிய மக்கள் சக்தி அதாவது ஜேவிபி. இவை தான் அமைப்புக்கள் என்ற ரீதியில் உள்ளவை. மக்கள் பலம் கொண்ட கட்சிகள் இரண்டு உள்ளன. அவற்றில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.. அமைப்புக்களும் மக்கள் ஆணையும் கொண்ட ஒரே கட்சி மொட்டுக் கட்சிதான். ஆனால் சிறந்த ஜனாதிபதி என்று நான் கண்ட ஜனாதிபதியின் கட்சிக்கு மக்கள் பலமும் இல்லை அமைப்புக்கள் பலமும் இல்லை. பொதுவாக நாட்டில் ஜனாதிபதி தேர்தல் என்று வரும் போது, பிரதான காரணிகள் மூன்று உள்ளன. ஒன்று அமைப்புக்கள் கொண்ட வலையமைப்பு, மக்கள் பலம் வேண்டும், தேசிய மக்கள் கட்சிக்கு மக்கள் பலம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை தந்தமைக்காக மக்கள் பலம் இருப்பது என்று அர்த்தம் இல்லை. அன்றிலிருந்து இன்று வரைக்கும் இரவோடு இரவாக நாடு முழுவதும் போஸ்டர் அடிக்கக் கூடிய ஒரே கட்சி ஜேவிபி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது உண்மை. நான் நம்புகிறேன். அதிலிருந்து எமது கட்சியும் பாடங்களை கற்றுக்கொண்டோம். மூன்றாவது தான் நாட்டினை வழிநடத்தக் கூடிய சிறந்த தலைவர் ஒருவர் தேவை. நமக்கு அது வாய்க்கவில்லை. மூன்று காரணிகளில் இரண்டு இருந்தும் சரியான தலைமை இல்லாமல் போனதால் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது போனது. அது இருப்பது மேற்கூறிய இரு காரணிகளும் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு.. ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர் அதனை மறுக்க முடியாது. இந்த மூன்றினையும் ஒன்றிணைப்பது தான் எனது எதிர்பார்ப்பு.. அப்போது நாடு சுபீட்சமாகும். நாம் சுயநலமாக இருக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏனைய கட்சிகளும் சேரலாம். ஐக்கிய மக்கள் சக்திக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதில் உள்ளோரும் எங்களிடம் இருந்து சென்றவர்கள் தானே.. தேசிய மக்கள் சக்தியும் எம்முடம் இருந்தவர்கள் தான்.. என்னுடைய கருத்து நாம் மூன்று தரப்பும் சேர்ந்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதே.. எதையும் நாம் நாட்டுக்காக துறக்கத் தயார்..” எனத் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.