நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
திறைசேரியின் நிதியைப் பயன்படுத்தி இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, 11 திட்டங்களுக்காக திறைசேரி 1000 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கியுள்ளது. அந்தப் பணத்தைப் பயன்படுத்தி இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் இந்த 11 அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதன்படி, 100 நகர வசதிகளை மேம்படுத்துவதற்கும் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கும் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்காக திறைசேரியால் 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கு அதிக பணம் தேவைப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
கம்பஹா பொதுச்சந்தை அபிவிருத்தி, பாணந்துறை சந்தை மற்றும் பல்நோக்கு கட்டிட அபிவிருத்தி, அவிசாவளை பொது சந்தை அபிவிருத்தி, நிந்தவூர் கடற்கரை பூங்கா நிர்மாணம், முல்லைத்தீவு பஸ் நிலைய நிர்மாணம், அலவ்வ பொது சந்தை அபிவிருத்தி, வரகாபொல பஸ் நிலைய அபிவிருத்தி, மினுவாங்கொடை பொது சந்தை, உத்தேச ஹொரண பொதுச் சந்தை திட்டம் மற்றும் நிர்மாணம், கேகாலை பஸ் டிப்போவை இடம் மாற்றுதல், அலவ்வ பாதசாரி பாதை மற்றும் போக்குவரத்து நிறுத்தம் அபிவிருத்தி செய்தல் ஆகிய 11 செயற்திட்டங்கள் ஆகும்.