தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று(15) கண்டி கரலிய மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தாதியர் தினம் – 2025 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
தாதியர்களாக நீங்கள் சுமந்திருக்கும் பொறுப்பு மற்றும் உங்கள் சேவையைப் பற்றி சிந்திக்க இன்று நம் அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தாதியர் தொழிலில் 95 சதவீதம் பேர் பெண்கள். இது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்று என்றோ அல்லது பெண்கள் மட்டுமே செய்யும் ஒனறு என்றோ நான் நினைக்கவில்லை. நூற்றுக்கு 95 சதவிகிதத்தினர் எப்படிப் பெண்களாக மாறினர் என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
பெண்களாகிய எமக்கு இயற்கையான திறமை ஏதாவது இருக்கிறதா என்றும் நான் சிந்தித்தேன்.
எந்தவொரு வேலையிலும் தொழில் பாதுகாப்பு பற்றிப் பேசும்போது, அது வெறும் சம்பளத்தைப் பற்றியது மட்டுமல்ல. பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழல் மற்றும் தொழிற் சூழலில் பாதுகாப்பு குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தொழிற்சூழல் பாதுகாப்பற்றதாக மாறும் நேரங்கள் உள்ளன.
பெண்கள் பெரும்பாலும் இரவு நேர வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், தொலைதூர இடங்களில், போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களிலும், தங்களை விட சக்திவாய்ந்தவர்களால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் இடங்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், ஒரு பெண்ணாக, நீங்கள் உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு, தேவையான சமூக சூழலும் வசதிகளும் தேவை. பெண்களாக நாம் எடுக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற நாம் என்ன வசதிகள் மற்றும் ஆதரவை வழங்குகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது, மகிழ்ச்சி மற்றும் ஆறுதல். அத்தகைய வாழ்க்கையை அடையக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.
கடினமான தெரிவுகளை எடுக்காமல், எளிதான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த தாதியர் தின கருப்பொருள் உரை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தாதியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் நடக்க வேண்டியது என்னவென்றால், தாதியர்களை வலுப்படுத்தும் ஒரு பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கருவிகளாக மாறினால், நாம் எப்படி எளிதான வாழ்க்கையை வாழ முடியும்? பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் உள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.