தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறை திணைக்களத்துக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குமே இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளைத் தனியொரு கட்சி ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் தலைமை நிர்வாகியைத் தெரிவு செய்யும் விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தலையிடாது என்று, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தனியொரு கட்சி ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைமை நிர்வாகியைத் தெரிவு செய்யும் விடயத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீடு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு அதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனர்.
இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு அந்தந்த கட்சிகளிடமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.