புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதன் காரணமாக நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.
புகையிரதத் திணைக்களம் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
கடந்த மே மாதம் 08ஆம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களம் கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஆராயப்பட்டதுடன், இதில் புலப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அத்திணைக்களத்தை மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக முன்னாள் புகையிரத பொதுமுகாமையாளர் மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், இந்த அதிகாரிகள் குழுவில் ஆஜராகியிருந்தனர்.
கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்களின் கூட்டங்கள் போதியளவு நடத்தப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியதுடன், 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரை முகாமைத்துவக் குழு போதியளவு கூட்டப்படாமை குறித்து முன்னாள் அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத பொது முகாமையாளர் ஆகியோரிடம் குழு கேள்வியெழுப்பியது.
கொரோனா தொற்றுக் காலத்தில் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனதாக முன்னாள் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருந்தபோதும், 2024 ஆம் ஆண்டில் அதை முறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் திட்டமிடப்பட்ட கடைசி கூட்டத்தை நடத்த முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலைமை காரணமாக நிறுவனத்தின் வினைத்திறன் குறைந்தமையால் 2022ஆம் ஆண்டு 64 புகையிரத சேவைகளும், 2023ஆம் ஆண்டு 61 புகையிரத சேவைகளும், 2024ஆம் ஆண்டு 46 புகையிரத சேவைகளும் காலதாமதம் அடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், நாளாந்தம் புகையிரத சேவைகள் காலதாமதம் அடைவது மற்றும் அவற்றைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை அமைச்சுக்கு கையளிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
அத்துடன், புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதால் நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.