இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடும் இலங்கையர்களும், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்படுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறார்கள்.
இவ்வறிவித்தல் இஸ்ரேலில் பணிபுரிந்து, மீண்டும் வேலைக்கு இஸ்ரேலுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் பொருந்தும்.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் (SLBFE) சட்டத்தின் பிரிவு 39 (1) (b) இன் படி, மறு – அறிவிப்பு வரும்வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதுடன், எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டல்கள் இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் (PIBA) அறிவிப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.