பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு கட்டணங்களை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2,500 ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, பாராளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.