இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
“பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தேவைக்காக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் முன்பதிவுகள் செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எந்தவொரு காரணத்திற்காகவும் இந்நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான். அதற்கு பிறகு, போரின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.
மேலும், தற்போதைய நிலையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா கூறினார்.
“எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல. அவை மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவிலிருந்து வருகின்றன.
ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் விநியோகஸ்தர்களுடன் பேசி, அதை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளோம். டீசல் விடயத்திலும் எவ்வித சிக்கலும் இல்லை,” என்றார்.