ஜூன் 27 முதல் ஜூலை 05 வரை கொழும்பில் நடைபெற உள்ள உலகளாவிய போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சிறப்பு போக்குவரத்துத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
போரா மாநாடு ஜூன் 25,27 முதல் ஜூலை 5 வரை பம்பலப்பிட்டி போரா மஸ்ஜிதிலும், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை, பம்பலப்பிட்டி போரா மஸ்ஜிதில் தினமும் காலை 7:00 மணி முதல் 11:30 மணி வரையும், பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் போரா மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நேரங்களில், வெள்ளவத்தையில் இருந்து மரைன் டிரைவ் வழியாக பம்பலப்பிட்டி ஊடாக கொள்ளுப்பிட்டியை நோக்கியும், கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி ஊடாக வெள்ளவத்தை நோக்கியும் கனரக வாகனங்களுக்கு நுழைவு மட்டுப்படுத்தப்படும்.
பம்பலப்பிட்டியிலுள்ள கிளெனபர் பிளேஸ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, அது காலி வீதி ஊடாக மரைன் டிரைவுக்கு திருப்பி விடப்படும்.
குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.