ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ என்ற சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜப்பான் மற்றும் தென் கொரியா தலைவர்களுக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதங்களின் நகல்களையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது:
“2025 ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான் மற்றும் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியாக 25% வரி விதிக்கப்படும். உங்கள் நாடுகளுடன் உள்ள வர்த்தக குறைபாடுகளை சரிசெய்வதற்கான இந்த நடவடிக்கை, மிகவும் குறைந்த அளவிலானது என்பதை உணர வேண்டும்.
உங்கள் நாடுகளும் இதற்கு பதிலளிக்க விரும்பினால், நீங்கள் எவ்வளவு வரியை உயர்த்தினாலும், அது எங்களின் 25% வரியில் சேர்க்கப்படும்” என்று ட்ரம்ப் அந்த கடிதங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதங்கள், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் ஆகிய இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், BRICS கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
அமெரிக்க நிர்வாகம், புதிய வரிவிதிப்பு மற்றும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றிய தகவல்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக தற்போது ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு முதல்கட்டமாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.