ரஷ்யா – உக்ரைன் போருக்கு இன்றுடன் (24) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
2021 ஆம் ஆண்டில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ‘நேட்டோ’ உறுப்பினர் பதவிக்கு ஆசைப்பட்டார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உக்ரைன் தொடர்ந்து நேட்டோ உறுப்புரிமையை நாடினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என புதின் மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மிரட்டல்களை உக்ரைன் ஜனாதிபதி ஏற்கவில்லை. அதன்படி பெப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. ரஷ்ய படையெடுப்பால் 7 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இதனிடையே, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், உக்ரைனில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 141 வாக்குகளும், ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
இலங்கை உட்பட 32 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் இந்தியா, சீனா, ஈரான், தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கும்.
ரஷ்யாவுடன் பெலாரஸ், வடகொரியா, எரித்திரியா, மாலி, நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.