follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுமுத்துராஜவெல போன்ற இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய சட்டம்

முத்துராஜவெல போன்ற இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய சட்டம்

Published on

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு ப் பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) நடைபெற்ற 10ஆவது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்றவர்களிடம் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான செய்தியை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
சுற்றாடல் முன்னோடியின் கடமை பெரும் தியாகம் எனவும், எதிர்கால சந்ததியினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

இன்று இந்தப் பதக்கங்களைப் பெற்ற அனைத்து சுற்றுச்சூழல் முன்னோடிகளையும் முதலில் வாழ்த்துகிறேன். இது ஒரு அர்ப்பணிப்பு. இந்த முன்னெடுப்பில் இணைய யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. மத்திய சுற்றாடல் அதிகார சபை 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதால், அனைவரும் தாமாக முன்வந்து இதில் பங்குகொண்டனர்.

வருங்கால சந்ததியினருக்காக நாம் அனைவரும் இந்த தியாகத்தை செய்கிறோம். இன்று உலகில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நான் குறிப்பிட வேண்டியதில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எங்களுக்கு சிக்கல்கள் இருந்தன. ஆனால் இன்றைய பிரச்சினை காலநிலை மாற்றத்தை எப்படி தடுப்பது என்பதல்ல, அதை எப்படி மட்டுப்படுத்துவது என்பதுதான். மேலும் இந்த பணியை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.

நம் முன்னோர்களின் காலத்தில் மின்சாரம் இருக்கவில்லை. மேலும் நமக்குத் தேவையான பொருட்கள் குறைவாகவே உள்ளன. வீடுகளில் குளிரூட்டிகள் இல்லை. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் நுகர்பொருட்கள் அதிகரித்துள்ளன. மற்றும் பல்வேறு வகையான உணவுகளை வாங்குகிறோம்.அன்று கைத்தொழிற்சாலைகள் இருக்கவில்லை. இன்று உலகம் முழுவதுமே தொழில்மயமாகிவிட்டது. எங்களுக்கு விமானப் பயணங்கள் தேவை. எனவே, தொழில் புரட்சிக்குப் பிறகு, உலகில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இரண்டு பெரிய போர்கள் வெடித்தன. அணுகுண்டு வீசப்பட்டது. சுற்றுச்சூழல் அழிவு அதிகரித்து வருகிறது. இதனால் இன்றைய காலநிலை முற்றிலும் மாறிவிட்டது.

2050இல் உலக மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கும். அப்போது நாம் எப்படி இந்த காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது? எனவே, ஒரு நாடென்ற ரீதியில் நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான புதிய சட்டங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட காலத்தில், அவை நவீன சட்டங்களாக இருந்தன, ஆனால் இன்று அவை நவீன சட்டங்கள் அல்ல. எனவே, புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் அவசியம்.மேலும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் புதிய சட்டங்கள் அவசியமாகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பான கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, சிங்கராஜ வனம், ஹோர்டன் சமவெளி, சிவனொலிபாதமலை மற்றும் நக்கிள்ஸ் ஆகிய இடங்களை பாதுகாக்க புதிய விதிகள் கொண்டு வரப்படும்.

முத்துராஜவெல போன்ற இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய சட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். மேலும், புதிதாக காடுகளை உருவாக்க வேண்டும். இதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்க இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாங்கள் அதனோடு நின்றுவிடாது காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதனை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடவிதானத்தில் சேர்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உலகின் முதல் சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். முதுகலைப் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பையும், ஆராய்ச்சிப் பணிக்கான வாய்ப்பையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

இன்று உலகில் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நிலையமொன்று கிடையாது. அந்த நிலையத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பல நாடுகளின் பங்களிப்புடன் அந்தப் பணி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2,000 – 3,000 பேர் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தேவையான பயிற்சிகளைப் பெற்று, உலகத்துடன் சிறந்த உறவை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இலங்கை என்ற வகையில் நாம் என்ன உதவிகளை செய்ய முடியும் என்பதை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு எம்மால் வழங்கக்கூடிய உறுதுணையாக இந்தப் பல்கலைக்கழகம் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே, தற்போது பல நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு டுபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இது குறித்த விடயங்களை முன்வைப்போம்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...