கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 362 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திய நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” இன்று தடுப்புக் காவல் உத்தரவுகள் நிறைவடைந்ததையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திய நந்துன் சிந்தகா அல்லது “ஹரக் கட்டா”, ஆகஸ்ட் 2022 இல் துபாயில் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் ஹரக் கட்டா டுபாய் பொலிஸார் விடுவித்திருந்தனர்.
பின்னர் மார்ச் 7, 2023 அன்று, “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக அல்லது “குடு சலிந்து” உட்பட 7 பேர் மடகாஸ்கரில் மீண்டும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மார்ச் 15, 2023 அன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்.
அதன் பின்னர் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, ஹரக் கட்டா தப்பிச் செல்ல முயன்றதையடுத்து, பாதுகாப்புப் படையினரால் அதனை முறியடிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், தடுப்பு உத்தரவுகளை இறுதி செய்த பின்னர், “ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” இன்று காலை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை, சலிந்து மல்ஷிக என்ற குடு சலிந்து இன்று காலை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.