இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீவைப்பு, அரச வங்குரோத்து நிலைமை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘‘Sri Lanka comeback story ’ என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று (26) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
விசேடமாக 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எமது வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 வீதத்தை இழக்க நேரிட்டது. அதன் பின்னர் கோவிட் பெருந்தொற்று காரணமாக எமது பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்குள் வீழ்ந்தது. இதன்பலனாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மூன்று மாதங்களில் 40 வீதத்தனால் வீழ்ச்சியடைந்தது. இதன்பின்னர் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி கண்டது. 2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதத்தினால் குறைந்தது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தில் பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்திருந்தது. உணவுக்கான பணவீக்கம் 95 வீதமாக இருந்தது.
இவ்வாறான நிலையில் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். மக்கள் பெரும் கஷ்டத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், நம்பிக்கை இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தில், நாட்டை மீண்டும் மீண்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இல்லையெனில் நாடு முழுமையாக அழிவுப்பாதைக்குச் சென்றிருக்கும். எனது வீட்டு நூலகத்தில் இருந்த புத்தகங்களும், ஓவியங்களும் எரிக்கப்பட்டாலும் நான் இந்தப் பணியில் இருந்து பின்வாங்கவில்லை. நாடு அழிவுப் பாதைக்குச் செல்லாமல் தடுத்து நாட்டை மீண்டெடுக்க நாம் பணியாற்றினோம்.
அரசாங்கத்தை அன்று பொறுப்பேற்ற பின்னர் ஐ.எம்.எவ், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தேன். செப்டம்பர் மாதம் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இணக்கப்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் வந்திருந்தோம். இந்த இணக்கப்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வழங்குவதற்கான இணக்கப்பாட்டில் ஆறு பிரதான மறுசீரமைப்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வறியோருக்கான வேலைத் திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். உலக வங்கி இதற்கான நிதியை வழங்கியுள்ளது. விசேடமாக இவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு உலக வங்கி கூறுகிறது. பொருத்தமானவர்களுக்கு கொடுங்கள். எனினும், தகுதியற்றவர்களை நீக்க வேண்டும். இதனை நாம் செய்ய வேண்டும்.புதிய பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன், குறைந்த வருமானம் பெறுவோரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தவிர எமக்கு வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. மாற்றுவழிகள் எதுவும் முன்மொழியப்படவும் இல்லை. வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஜ.எம்.எவ். 6 மாதத்திற்கு ஒரு தடவையே எமது நாட்டுக்கு வருகிறது. குறைபாடுகள் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கலாம்.
தேசிய பேரவை போன்று பல குழுக்கள் உள்ளன. முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்ற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இது தொடர்பில் பல கருத்துகள் இருக்கலாம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2048 ஆம் ஆண்டாகும் போது நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இன்றேல் நாம் இளைஞர்களை காட்டிக் கொடுத்தவர்களாக ஆகியிருப்போம். அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியதாக ஆகிவிடும் இளைஞர்கள் குறித்து சிந்திக்க வேண்டும். அதிகார மையம் பற்றி மாத்திரம் சிந்திக்கக் கூடாது. இதனை நாம் முன்னெடுக்கத் தவறினால் ஓரிரு ஆண்டுகளில் எங்கள் எவருக்கும் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே அனைவரும் இணைய வேண்டும். 2048 ஆம் ஆண்டு வரையான கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் 5 வருடங்களுக்கான திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்ப வழங்க வேண்டும்.