புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார்.
இருபது இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும என்ற சமூகப் பாதுகாப்பு நிவாரணத்தை வழங்குவதே இந்த ஆண்டு எமது முக்கியப் பணியாகும். ” புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு ” என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் அதில் 03 இலட்சம் பேரை வலுவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது, பயனாளிகளுக்கு பணம் வழங்கும் செயல்முறைக்கு அப்பால், எமது முக்கிய நோக்கம் அவர்களை வலுவூட்டுவதாகும். அதற்காக தற்போதுள்ள பொறிமுறையை மாற்றவும் முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம். ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000 பேரை தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு தொழில்களை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
மேலும், பயனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடவும் ஊக்குவித்து வருகின்றோம். வெளிநாட்டுச் சந்தையை இலக்காக கொண்டு, முக்கியமாக தேயிலை, கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவு நிதியம் ஒன்றை ஆரம்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேம்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் சுமார் 25,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் சேவையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சுமார் 2000 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும் என்று சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.