விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 117 ஆவது இலங்கை பொறியிலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த அமர்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போட்டித்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகிய துறைகளில் பொறியியலாளர்கள் சிறப்பான பணியை ஆற்றி வருவதாகவும், அந்த துறைகளைப் பலப்படுத்தினால் நாட்டில் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பல்வேறு துறைகளிலும் பொறியியலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அதனை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டமிடலுடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
மகாவலி வலயம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தாத 7 – 10 இலட்சம் ஏக்கர் வரையிலான காணிகள் உள்ளதாகவும், விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் போது அவற்றைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல் பல்வேறுபட்ட விவசாய ஆய்வு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டுவரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தனியார் துறையினரின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு விவசாயஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் பட்சத்தில் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை வலுவாக முன்னெடுக்க முடியும் என எதிபார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடன் நீடிப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டமைத்தல் உள்ளிட்ட இலக்குகளை அடைய அறிவுபூர்வமான மற்றும் வலுவான பிரவேசம் அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்தார்.
பொறியியல் தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு இன்றி நாட்டை முன்னேற்றுவது சவாலானது என்றும், திறன்மிக்க பொறியியலாளர்களை உருவாக்கும் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், தேவைப்படும் பட்சத்தில் வெளிநாட்டு பொறியியலாளர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.