மனித – விலங்கு மோதல்கள் தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான தீர்வுகளுக்குச் செல்ல வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக அந்தந்த நிறுவுனங்களின் வகிபாகங்கள் குறித்து இங்கு வெவ்வேறாகக் கலந்துரையாடப்பட்டதுடன், காட்டு விலங்குகளின் பிரச்சினைகள், போதுமான மனித மற்றும் பௌதீகள வளங்கள் இல்லாமை போன்றவை அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் என்பனவும் இதில் அடங்கும்.
யானை – மனித மோதல்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்படும் ஏனைய உயிரினங்களான செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும், இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயத்துறை பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவது கடினம் என்றாலும், விரைவில் தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
அத்துடன், யானை மனித மோதல்களை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், யானைகள் நடமாடும் எல்லைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார்.
மேலும், யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்கும் வகையிலான கமரா அமைப்புக்கள் பொருத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.