தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த ஜூலை 18 ஆம் திகதி ஒரு நபரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், இன்று (25) அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 4.30 மணியளவில், கஹதுடுவ பகுதியில் பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டை விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டுள்ளனர். அந்த நேரத்தில், அங்கு ஒளிந்திருந்த சந்தேகநபர், படையினர்மீது துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடி கொடுத்த விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர், தற்போது களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.