காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்த முற்றுகை நிலத்தின் வடக்கில் விரைவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் வடக்கு காசாவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருப்பதோடு பிரதான ஐ.நா. அமைப்பினால் அதனை கையாள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
‘எந்த மாற்றமும் நிகழாத பட்சத்தில், வடக்கு காசாவில் விரைவில் பஞ்சம் ஏற்படும்’ என்று உலக உணவுத் திட்ட பிரதி நிறைவேற்று பணிப்பாளர் கார்ல் சகாவு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவுக்கு உதவிகள் செல்வது இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதோடு காசாவின் மற்றப் பகுதிகளுக்கு மாத்திரம் சிறிய அளவான உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன.
எனினும் உதவிகள் தயார் நிலையில் எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸின் சார்பில் பேசவல்ல ஸ்டீபன் டுஜரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காசாவுக்கு உதவிகள் செல்வதை இஸ்ரேலிய படை திட்டமிட்ட வகையில் முடக்கி வருவதாக ஐ.நா மனிதாபிமான அலுவலக பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் ஜெனீவாவில் இருந்து நேற்று முன்தினம் குறிப்பிட்டார்.
உதவி வாகனங்கள் வடக்கு காசாவுக்கு செல்ல அனைத்தும் திட்டமிடப்பட்டபோதும் இஸ்ரேலிய நிர்வாகம் அண்மைய வாரங்களாக அனுமதி மறுத்து வருகிறது.
கடைசியாக கடந்த ஜனவரி 23 ஆம் திகதியே அந்தப் பகுதிக்கு உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.